மார்ச் 12
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40)
நற்பலன் நல்குகின்ற உற்சாகமூட்டும் செயலாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் எச்சரிப்பாகவும் விளங்கும் ஒன்றை இங்கே நாம் காண்கிறோம். கிறிஸ்துவின் சகோதரருக்கு ஆற்றிய நன்மை அவருக்கே செய்ததாகக் கருதப்படுகிறது.
உடன் விசுவாசிக்கு நாம் பாராட்டும் தயவின் காரணமாக, ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குத் தயவு பாராட்டுகிறவர்களாக நாம் காணப்படுவோம். தேவனுடைய மக்களுக்கு விருந்தோம்பல் செய்வது, நமது வீடுகளில் அவருக்கே விருந்து செய்வதற்கு ஒப்பாகும். நமது வீட்டில் இருக்கும் சிறந்த படுக்கை அறையை தேவனுடைய மக்களுக்கு அளிப்போமாயின் அதனை அவருக்கே அளித்ததாகக் கருதப்படும்.
இராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் நமது இரட்சகர் நம் இல்லம் தேடி வருவாராயின், நம்மில் ஒவ்வொருவரும் இயன்ற அனைத்தையும் விரைவாய்ச் செய்ய முனைவோம் அல்லவா? ஆனால், பொதுவாக அவர் மிகவும் எளிய வேடம் புனைந்தவராக நமது வாசலண்டை வருகிறார். இதுவே நம்மைச் சோதனைக்குள்ளாக்குகிறது. அவருடைய சகோதரரில் சிறியவரை நாம் எவ்விதம் நடத்துகிறோமோ, அதுவே அவரை நடத்துகிற விதமாகக் காணப்படும்.
திருமறையிலிருந்து செய்தியை அளிக்கும் எண்ணத்துடன், வயது முதிர்ந்த தேவபக்தி நிறைந்த பிரசங்கி ஒருவர் கிறிஸ்தவ சபை ஒன்றிற்குச் சென்றார். தனிப்பட்ட வகையில் அவர் கவர்ச்சிமிக்கவராகக் காணப்படவில்லை. மேடைகளில் திறமையை வெளிப்படுத்தும் ஆற்றலையும் அவர் கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் தேவனுடைய ஊழியராகவும், கர்த்தரிடமிருந்து செய்தி ஒன்றைப் பெற்றவராகவும் இருந்தார். கூட்டங்களுக்குத் தங்கி இருக்கும்படியாக அவரை அந்தச் சபையின் கண்காணிகள் கேட்டுக்கொள்ளவில்லை. கறுப்பர்கள் வாழும் பகுதிகள் உள்ள சபைக்குச் செல்லும்படியாக அவருக்கு ஆலோசனை கூறினர். அம்முதியவரும் அவ்வாறே செய்தார். அங்குள்ள சகோதரார்கள் அவரை அன்போடு வரவேற்றனர். வாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆடம்பரமான சபை விசுவாசிகளிடம்”அவர் வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லை, ஆனால் அவரை நான் விரும்பினேன். அவரை வேண்டாமென்று நீங்கள் நிராகரித்ததின் மூலம் என்னை நிராகரித்தீர்கள்” என்று கர்த்தர் கூறுவதுபோல் அந்நிகழ்ச்சி அமைந்தது.
“எவ்வாறு மிகச் சிறந்த விருந்தினர் வருபை புரிந்தார்” என்று ஒரு கவிதையை எட்வின் மார்க்காம் என்பார் இயற்றியுள்ளார். கர்த்தர் ஒருநாள் வருவார் என்று எண்ணியெண்ணி நுட்பமாய் ஆயத்தம் செய்த செருப்பு தைக்கும் தொழிலாளியைக் குறித்த கதை. அவர் எதிர்பார்த்த வண்ணம் கர்த்தர் வரவில்லை. ஆனால் அவருடைய வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரர் வந்தார். அந்தத் தொழிலாளி தான் செய்வித்த மிதியடியை அவருக்கு அணிவித்தார். ஒரு வயது முதிர்ந்த பெண்மணி வந்தபோது, அவருடைய சுமையைத் தூக்கி உதவிபுரிந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளி மேலும் அப்பெண்ணிற்கு உணவளித்தார். அடுத்து வழி தவறிய சிறுபெண் அங்கே வந்தாள். செருப்புதைப்பவர் அச்சிறு பெண்ணின் தாயைத் தேடி, குழந்தையை அவளிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்.
அப்பொழுது அந்தச் செருப்பு தைக்கும் கைவினைஞர் மெல்லிய குரலில் ஒன்றைக் கேட்டார்: “எனது வாக்குறுதியை நிறைவேற்றினேன், ஆகவே உனது இருதயத்தை உயர்த்திக் களிகூரு. நட்புமிகு உனது வாசலண்டை மூன்றுமுறை வந்தேன். எனது நிழல் உனது கூடாரத்தை மூன்றுமுறை தொட்டது. காலில் சிராய்ப்புடன் பிச்சைக்காரனாக வந்தேன். நீ அளித்த உணவை உண்ட பெண்ணும் நானே. வீட்டை இழந்து தவித்த சிறு குழந்தையாக வந்தவளும் நானே”.