பெப்ரவரி 28
அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3).
மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், வியத்தகு வகையில் தெய்வீகமும், மனித இயல்பும் ஒருங்கிணைந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, திருமறையைப் பார்ப்போம். அதனை எழுதிய தெய்வீக எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். தூய ஆவியானவரால் ஏவுதல் பெற்று அதனைப் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்.
இரட்சிப்பைப் பொறுத்தமட்டில், கர்த்தரே அதனைத் தொடங்குகிறவரும், நிறைவேற்றுகிறவருமாக இருக்கிறார். அதனை ஒரு மனிதனால் சம்பாதிக்க முடியாது. அதனை அடைவதற்கு அவன் தகுதி படைத்தவனும் இல்லை. இரட்சிப்பிற்கென்று தனிமனிதர்களைத் தேவன் தெளிவாகத் தெரிந்துகொள்கிறார். எனினும் அவர்கள் குறுகிய வாசலின் வழியாக உட்புகவேண்டும். அகவேதான் பவுல் தீத்துவுக்கு, “…. விசுவாசம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி” என்று எழுதியுள்ளார்.
தேவனுடைய செயலின்படி, “தேவனுடைய பெலத்தினாலே நாம் காக்கப்பட்டிருக்கிறோம்” என்று காண்கிறோம். அங்கு மனிதனுடைய பங்கு, “விசுவாசத்தைக்கொண்டு” என்பதாகும். “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு…” என்று அதனை இணைத்துக் காண்கிறோம் (1.பேது.1:5).
இறைவனாலே என்னைப் பரிசுத்தமாக்க இயலும். ஆயினும் எனது ஒத்துழைப்பின்றி என்னை அவரால் பரிசுத்தமாக்க முடியாது. என்னுடைய விசுவாசத்தோடும் தைரியத்தையும், ஞானத்தையும், இச்சையடக்கத்தையும், பொறுமையையும், தேவபக்தியையும், சகோதர சிநேகத்தையும், அன்பையும் நான் கூட்டி வழங்கவேண்டும் (2.பேது.1:5-7). தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.6:13-18). முந்தின மனிதனைக் களைந்து, புதிய மனிதனை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.4:22-24). ஆவிக்கேற்றபடி நான் நடக்கவேண்டும் (கலா.5:16).
இதுபோலவே, கிறிஸ்தவ ஊழியத்திலும் தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைந்து செயல்ப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். பவுல் நட்டான், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார் (1.கொரி.3:6).
ஊள்ளுர் சபையில் தலைமைத்துவத்தைக் குறித்து நோக்குங்கால், தேவனே ஒரு மனிதனைக் கண்காணியாக நிறுவமுடியம் என்பதை அறிந்திருக்கிறோம். எபேசுப் பட்டணத்தில் கண்காணிகளைத் தூய ஆவியானவரே ஏற்படுத்தினார் என்பதைப் பவுல் நினைவுபடுத்துகிறார் (அப்.20:28). என்றாலும் மனிதனுடைய சித்தம் அதில் தேவைப்படுகிறது. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் (1.தீமோ.3:1).
கடைசியாக, நாம் மேலே குறிப்பிட்டுள்ள வேதவசனத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம். தேவனே நமது எதிரிகளை அழிக்கிறார். எனினும் நாம் அவர்களைத் துரத்தி, அழிக்க வேண்டும் (உபா.9.3).
ஒரு விசுவாசி ஏற்றத்தாழ்வு இன்றிக் காணப்படவேண்டுமென்றால், அங்கு தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைய வேண்டும். எல்லாமே தேவனைச் சார்ந்தது என்று ஜெபிக்கவேண்டும். எல்லாமே தன்னைச் சார்ந்தது என்று அவன் செயல்புரிய வேண்டும். போர்க்கால அறிவுரைகளை எடுத்துரைப்போம்.”கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம், படைக்கலனை ஏந்திச் செல்லுவோம். “மிகுதியான அறுவடை வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடுவோம். மண்வெட்டியை நாம் பயன்படுத்துவோம்.