பெப்ரவரி 27
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27).
கர்த்தரே வெற்றிக்குக் காரணர்
தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர அறுக்கப்படாத மரப்பலகையைப் பயன்படுத்தி அழகிய மரம்பொருள் ஒன்றை ஒரு தச்சன் உருவாக்குவானென்னால், நேர்த்தியான மரத்திலிருந்து அத்தகைய பொருளை உருவாக்குவதிலும் அதிகமாகப் புகழப்படுவான். அதுபோலவே அழிவானவற்றையும், அற்பமானவற்றையும், பலவீனமானவற்றையும் பயன்படுத்தி, மகிமையான விளைவுகளைத் தேவன் உண்டாக்கும்போது, அவருடைய செயல்த்திறனும் வல்லமையும் உயர்த்தப்படுகின்றன. வெற்றிக்குக் காரணம் மூலப்பொருட்களே என்று மனிதர்கள் கூறமாட்டார்கள். கர்த்தரே வெற்றிக்குக் காரணர் என்று அறிக்கைசெய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
பலமுள்ளவற்றை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவற்றைத் தெரிந்துகொண்டதை உறுதிசெய்ய, நியாயாதிபதிகள் நூல் பற்பல எடுத்துக்காட்டுகளைத் தருகின்றது. எடுத்துக்காட்டாக, பென்ஜமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஏகூத் இடதுகைக்காரன். இடதுகை பலவீனத்தைக் குறிப்பதாகத் திருமறையில் காணலாம். ஆனாலும் மோவாபின் மன்னனாகிய அக்லோனைக் கொன்று இஸ்ரவேல் நாட்டை மீட்டு, 80 ஆண்டுகள் அதற்கு அமைதியைக் கொடுத்தான் (நியா.3:12-30).
படைக்கலன் என்று கருதுவதற்குத் தகுதியற்ற தாற்கோலை ஆயுதமாக ஏந்திப் போருக்குச் சென்ற சம்கார், 600 பெலிஸ்தரைக் கொன்று இஸ்ரவேலை மீட்டுக்கொண்டான் (3:31). “பலவீன பாண்டமாகிய” தொபோராள் தேவனுடைய வல்லமையால் கானானியரை நொறுக்கி வெற்றிகொண்டாள் (4:1-5:31). மனிதனின் எண்ணத்தின்படி, பாராக்கின் 10,000 வீரர்கள் கொண்ட காலாட்படை சிசெராவின் 900 இரும்பு ரதங்களுக்கு எவ்விதத்திலும் சமமானவர்கள் அல்ல. எனினும் பாராக், சிசெராவின் படையைக் கலங்கடித்தான் (4:10-15). ஒரு கூடார ஆணியைக்கொண்டு, யாகேல் என்னும் பெண்ணொருத்தி சிசெராவைக் கொன்றாள் (4:21). செப்டஜின்ட் மொழிபெயர்ப்பில் அந்தக் கூடார ஆணியை அவள் தனது இடதுகரத்தில் பிடித்திருந்தாள் என்று சொல்லப்பட்டுள்ளது. மீதியானியருக்கு எதிராகப் போர்தொடுத்த கிதியோனின் படைவீரர்களின் எண்ணிக்கையை 32 ஆயிரத்திலிருந்து 300 ஆகக் கர்த்தர் குறைத்தார் (7:1-7). அவனுடைய படை ஒரு சுட்ட வாற்கோதுமை அப்பத்திற்கு ஒப்பிடப்பட்டது. வாற்கோதுமை அப்பம் எளியவர்களின் உணவாகும். அது ஏழ்மையையும், பலவீனத்தையும் சித்தரிக்கிறது (7:13). அவனுடைய படைக்கலன்கள் எக்காளமும், பானையும், தீவட்டியுமே (7:16). அவற்றைப் படைக்கலன்கள் என்று கருத இயலுமா? அது போதாதென்று, நிச்சயமாகத் தோல்விதான் என்று எண்ணும்படி, அந்தப் பானை உடைக்கப்படவேண்டும் (7:19). ஒரு பெண்மணி எந்திரக்கல்லைத் தூக்கிப்போட்டு அபிமலேக்கைக் கொன்று போட்டாள் (9:53). தோலா என்னும் பெயர் புழு என்று பொருள்படும். ஒரு படைத்தலைவனுக்கு உகந்த பெயர் அதுவன்று (10:1). சிம்சோனின் தாயை முதன்முதலில் சந்திக்கும்போது பெயர் சொல்லப்படாதவளாக, பிள்ளையற்றவளாகவே காண்கிறோம் (13:2). கடைசியில், அவன் படைக்கலன் என்று கருதுவதற்கு எத்தகுதியும் இல்லாத ஒரு கழுதையின் தாடையெலும்பை எடுத்து, அதினாலே 1000 பேரைக் கொன்றுபோட்டான் (15:15).