பெப்ரவரி 25
உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29)
தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பார்வையற்ற இருவரிடம் வினவியபோது, அவர்கள் அவ்வாறு விசுவாசிக்கிறதாக விடைபகர்ந்தனர். அப்பொழுது அவர்களுடைய கண்களை அவர் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படி ஆகக்கடவது” என்றார். உடனே அவர்கள் பார்வையைப் பெற்றனர்.
நாம் போதுமான அளவு விசுவாசத்தை உடையவர்களாக இருந்தால் நாம் விரும்பியபடி செல்வத்தையும், உடல்நலத்தையும் மற்ற எதையும் பெறலாம் என்ற முடிவுக்கு வருவது மிக எளிது. அதில் எவ்வித உண்மையுமில்லை. அதற்கு மாறாக, கர்த்தருடைய சொற்களையோ, தேவனுடைய வாக்குறுதிகளையோ அல்லது திருமறையில் நமக்களிக்கப்பட்ட கட்டளைகளையோ நமது விசுவாசம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இல்லையெனில் அது நம்புதற்கரிய வெறும் ஆசையாய்ப் போய்விடும்.
நமது விசுவாசத்தின் அளவைப் பொருத்தே, தேவனுடைய வாக்குறுதிகளை நாம் சார்ந்திருக்கிறோம் என்ற உண்மையே மேற்கூறிய வசனம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. சீரியர்கள் முறிய அடிக்கப்படுவார்கள் என்னும் வாக்குறுதி மன்னர் யோவாசுக்கு அளிக்கப்பட்டது. அப்பொழுது தன்னுடைய அம்பை எடுத்துத் தரையில் அடிக்கும்படி எலிசா அவனிடம் கூறினான். யோவாஸ் மும்முறை அடித்து நிறுத்திவிட்டான். ஐந்து அல்லது ஆறுமுறை அடிந்திருந்தால் அவன் சீரியரைத் தீர முறியடித்திருப்பான் என்று அறிந்திருந்த எலிசா கோபம்கொண்டு யோவாஸ் மூன்றுமறை மட்டுமே சீரியரை முறியடிப்பான் என்று கூறினான் (2.இராஜா.13:14-19). அவனுடைய விசுவாசத்தின் அளவின்படி அவனுக்கு வெற்றிகிட்டியது.
சீடர்கள் வாழ்விலும் அதுபோலவே நடைபெறும். யாவற்றையம் துறந்து நாம் விசுவாச வாழ்க்கையை நடத்தும்படி அழைக்கப்பட்டுள்ளோம். பூமியில் செல்வத்தைச் சேர்ப்பதற்கு நாம் தடைசெய்யப்பட்டுள்ளோம். இக்கட்டளைக்குக் கீழ்ப்படிய எந்த அளவிற்கு நாம் தைரியம் கொண்டிருக்கிறோம். காப்பீட்டுப் பத்திரங்கள், சேமிப்புக் கணக்குகள், பங்குகள், செல்வங்கள் இவைகளை நாம் உடையவராக இருக்கக்கூடாதா? அதனுடைய விடையை “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” என்னும் வசனத்தில் காணுங்கள். “என்னுடைய குடும்பத்தின் தேவைக்காக அயராது உழைப்பேன். தேவைக்கு மிகுதியாகப் பெறுவதைக் கர்த்தருடைய ஊழியத்திற்கு அளிப்பேன். பிற்கால வாழ்க்கைக்குக் கர்த்தரையே சார்ந்திருப்பேன்” என்று நீங்கள் முடிவெடுப்பீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுடைய வருங்காலத்தை அவர் காத்துக்கொள்வார்.
கர்த்தரும், அவருடைய சொற்களும், ஒருநாளும் உண்மையற்றுப்போவதில்லை. மாறாக, மனித அறிவின் அடிப்படையில் எதிர்நோக்கும் வியாதியின் நாளுக்குத் தேவையென்று செல்வத்தைச் சேர்த்து வைப்போமாயின், அவர் நம்மீது தொடர்ந்து அன்பு பாராட்டி நம்மைப் பயன்படுத்தி நமது விசுவாசத்திற்குத்தக்கவாறு அப்படிப்பட்ட நாளை நம் வாழ்வில் வரச்செய்வார்.
எசேக்கியேல் 47 வது அதிகாரத்தில் நாம் காணும் ஆலயத்தினின்று ஓடி வருகிற வெள்ளத்தைப் போன்றதே விசுவாசம். கணுக்கால் அளவோ, முழங்கால் அளவோ, இடுப்பளவோ இன்னும் அதிகமாகவோ நீர் பாய்ந்துவரும். அதில் நீங்கள் நீந்தவும் செய்யலாம்.
தேவனுடைய நற்பேறு அவரை முற்றிலும் நம்புகிறவர்களையே சாரும். அவருடைய உண்மையும், போதுமான தன்மையையும் நாம் நிரூபிப்போமாயின், நமது பிற்கால வாழ்வினில் கைத்தடியும், உன்றுகோலும், தலையணைகளும் தேவையில்லை. “நீரில் ஒருமுறை நடப்பீர்கள் என்றால், படகில் செல்ல நீங்கள் விரும்பமாட்டீர்கள்”