பெப்பரவரி 23
புத்திமான் கேட்பான். (நீதி.1:5)
புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக் கூறுகிறது.
பிறர் கூறுவதைக் கேட்பதற்கு மதீயீனன் மனத்திறன் படைத்தவன் அல்லன் என்று இந்நூல் கூறவில்லை. பிறர் கூறுவதைப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவனாகவே அவன் இருக்கிறான். ஆனாலும், அவனிடம் எதையும் சொல்வதற்கு அவன் இடங்கொடுப்பதில்லை. சிந்தித்துச் செயலாற்றுவதில் திறம்படைத்தவன் என்றும், முடிவில்லா ஞானம் உடையவன் என்றும் தன்னைக் குறித்து அவன் கருதுகிறான். நண்பர் எவரேனும் அவனுக்கு அறிவுரை கூறவிழைந்தால், அவனுடைய எள்ளிநகையாடுதலைப் பரிசாகப் பெறுவர். தன்னுடைய பாவத்தினாலும், மதீயினத்தினாலும் உண்டாகிற வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க அவன் முயற்சி செய்வதைக் காணும் அவனுடைய நண்பர்களால், அவன் அடையும் வீழ்ச்சியினின்று அவனைக் காக்க இயலாது. ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மற்றொரு இக்கட்டை நோக்கி அவன் செல்லுவான். அவனுடைய பொருளாதார நிலை சீர்குலையும். அவனது தனிப்பட்ட வாழ்வும் சீரழியும். அவனுடைய தொழிலும் குழப்பத்தின் எல்லையில் நிற்கும். தானே தனக்கு மிகப்பெரிய எதிரி என்பதை அறியாது, வாழ்க்கை தனக்கு மாபெரும் தொல்லையைத் தருகிறது என்று தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் கூறுவான். மற்றவர்களுக்குத் தாராளமாக அறிவுரை நல்கும் அவன், தன்னுடைய வாழ்க்கையைச் சீராக நடத்த மறந்து போவான். முன் யோசனையின்றித் தாறுமாறாகப் பேசும் அவன், மற்றவர்களுடைய அறிவு, அமைதி, மற்றும் உண்மையுடைய பேச்சிற்குத் தடையாய் நிற்பான்.
ஆனால் புத்தியுள்ளவன் நற்கூறுகளால் உண்டாக்கப்பட்டிருக்கிறான். மனிதர்கள் யாவரும் முதல் மனிதனாகிய ஆதாமின் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவன் அறிந்திருக்கிறான். சில இடையூறுகளில் தான் கவனிக்காமல் விட்டுவிட்ட அம்சங்களை மற்றவர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறான். சிலவேளைகளில் தனக்கு ஞாபகமறதி உண்டாகியிருக்கும் என்று ஒப்புக்கொள்கிறான். மற்றவர்கள் கற்றுத்தருவதை, தான் சரியான முடிவெடுப்பதற்குத் தேவையான அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்கிறான். மற்றவர்கள் தரும் அறிவுரைகளை நாடி வேண்டுகிறான். ஏனெனில், “ அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் பாதுகாப்பு உண்டாகும்” என்பதை அவன் அறிந்திருக்கிறான் (நீதி.11:14). எல்லோரைப் போலவும் சில தருணங்களில் தவறுசெய்கிறான். ஒவ்வொரு முறை தோல்வியைச் சந்திக்கும்போதும், அது தான் வெற்றி பெறுவதற்கான படி என்று கருதி, அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்கிறான். அவனுடைய தவறைப் பிறர் கடிந்துணர்த்தும்போது, “நான் தவறிழைத்து விட்டேன், மன்னியுங்கள்” என்று கூறி நன்றிபாராட்டுகிறான். புத்தியுள்ள பிள்ளைகள் பெற்றோர்களின் ஒழங்கு நடவடிக்கைக்குக் கட்டுப்படுகின்றனர். மதியீனமான பிள்ளைகள் எதிர்த்து நிற்கின்றனர். ஒழுக்கத்தின் தூய்மையைக் காப்பதற்குத் தேவையான கற்பனைகளுக்கு ஞானமுள்ள இளைஞர்கள் கீழ்ப்படிகின்றனர். மூடர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவர். கர்த்தருக்குப் பிரியமாக இருக்கின்றனவா என்று ஞானமுள்ள இளைஞன் எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பான். மூடனோ தனக்குப் பிரியமானபடி செய்வான்.
இவ்விதமாகப் புத்திமான் புத்தியில் வளருகிறான். அறிவீனன் மாற்ற முடியாதபடி தன் அறிவீனத்திலே சிக்கித் தவிக்கிறான்.