பெப்ரவரி 17
நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1)
“அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு உட்படுவதினாலேயே நாம் பொறுமையைக் கற்றுக்கொள்கிறோம். நெருக்கத்தின் வழியாகச் சென்று விசாலத்தைப் பெறுகிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் இடர்ப்பாடுகள் நமக்குப் புத்தி புகட்டும் பாடங்களாக அமைந்துள்ளன. அதன் காரணமாக நாம் பெருந்தன்மை பெற்றவராய் மாறுகிறோம். இதனை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உணர்கிறான். சார்ல்ஸ் கெட்டரிங் என்பவர், „ முன்னேற்றத்திற்கான விலை தொல்லைகளில் உள்ளன. தொல்லையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் கொண்டுவரவேண்டாம். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.
பாடுகளே நன்மையைப் பிறப்பிக்கும் ஊற்றாக விளங்குகின்றன என்னும் உண்மைக்குக் கிறிஸ்தவ உலகமே சான்று பகரும்.
“பாடுகள் பறந்து போகும். அதன் பலனோ பரலோகம் தொடரும்” என்னும் அடிகள் இதனை விளக்குகின்றன.
“விண்ணகம் ஏகிடும் வெளிச்சத்தின் பிள்ளைகள்
பன்னரும் இசையினைப் பாங்காய் எழுப்புவர்
மண்ணகம் வாழ்ந்த வேளையில் தோன்றிய
காரிருள் சூழலில் கற்றதாய்ச் சொல்லுவார்.
சோகத்தின் ஆழத்தில் எழுந்த நற்பாடல்கள்
சோதனைக் கூடத்தில் ஒத்திகை கண்டபின்
நேசத்தின் கீதமாய் இனிதுடன் ஒலித்திடும்
தந்தையின் வீட்டினைத் தகைவாய் நிரப்பிடும்”.
என்று ஒரு கவிஞர் இக்கருத்தினை வலியுறுத்துகிறார்.
ஸ்பர்ஜன் இதனை நிகரற்ற முறையில் எழுதியுள்ளார்: “என்னுடைய வசதியான நிலையினாலும், இன்பமான காலத்தினாலும், மகிழ்ச்சியான நேரத்தினாலும் நான் பெற்ற கிருபை ஒரு சல்லிக் காசுக்கும் ஈடாகாது என்று அஞ்சுகிறேன். துன்பத்திலும், வேதனையிலும், இடுக்கண்களிலும் நான் பெற்ற நன்மைகள் ஏராளம். எண்ணிலடங்கா, என்மேல் விழுந்த சுத்தியலுக்கும், என்னைப் பதம்பார்த்த அரத்திற்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன். இடுக்கண் என் இல்லத்தில் காணும் மிகச் சிறந்த கருவியாகும்.
எனினும், ஏன் நாம் வியப்படைகிறோம்? ஏபிரெய எழுத்தாளர் நமக்கு எழுதிக்கொடுத்துள்ள அருஞ்சொற்களைக் காணுங்கள். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாக சமாதான பலனைத் தரும்” (எபி.12:11).