பெப்ரவரி 20
நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33)
தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது போன்று, நாமும் நம் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்திருத்தல் இன்றியமையாதது ஆகும். ஒரே நேரத்தில் அனைத்துத் திக்குகளையும் நோக்கி விரைவாக நாம் ஓடவேண்டும் என்பது இதன் பொருளன்று. நரம்புகள் தெறிக்க எல்லாச் செயல்களையும் செய்யவேண்டும் என்பதும் இதன் பொருளன்று. நமக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பினுக்கு முதலிடம் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
இராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவர் கூறியுள்ள சொற்களுக்கு நாம் இசைந்து செயல்ப்படுவது தகுதியானது. „காடுகள் அழகுபொருந்தியவை, இருள் சூழ்ந்தவை, நெருக்கமானவை. நாம் அங்கு அமர்ந்திருந்து ஓய்வெடுக்கமுடியாது. ஆனால் நான் கைக்கொள்ள வேண்டிய வாக்குறுதிகள் ஏராளம். உறங்குவதற்கு முன்னர் செல்லவேண்டிய இலக்கு வெகுதொலைவு“.
ஏமி கார்மைக்கேல் அம்மையாரும் இதே ஆவியைப் பற்றிக்கொண்டவராக, „ தேவனுடைய சூளுரை என்மீது விழுந்த கடமையாகும். மரத்தின் கீழ் நிழலில் விளையாடுவதற்கு நான் தங்கமாட்டேன். தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பது என் பணியல்ல. எனக்களிக்கப்பட்ட பணியினை நிறைவேற்றிக் கணக்கினை ஒப்புவிக்கும்வரை ஓய்ந்திருக்கப்போவதில்லை“ என்று எழுதியுள்ளார்.
வேறோரு இடத்தில் அம்மையார் எழுதியுள்ளதாவது: „ நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பன்னிரண்டு மணிவேளை மிகக் குறுகியதாக இருக்கிறது. பெற்ற பொறுப்பினை உணர்ந்து, விரைவினில் நிறைவேற்ற நான் கொண்டிருக்கும் உறுதி என்னில் மடிந்துபோகக் கூடாது. நல்ல மேய்ப்பரே, மலைகளில் உம்முடன் சேர்ந்து தேடுகிறவராக எப்பொழுதும் நாங்கள் காணப்படவேண்டும்.
சார்ல்ஸ் சிமியோன் எங்கு சென்றிடினும், கென்றி மார்ட்டின் என்பவரது படத்தை எடுத்துச் செல்வாராம். தனது அறையில் அமர்ந்து வேதத்தைப் படிக்கும் வேளையில் தன்னைப் பார்த்து, „ஊக்கத்துடன் செயல்ப்படு. கவலையற்றுப்போகாதே, கவலையற்றுப்போகாதே“ என்று மார்ட்டின் சொல்வது போன்று சிமியோனுக்குத் தோன்றும். அதற்கு சிமியோன்“ நான் ஊக்கத்துடன் செயலாற்றுவேன், நான் ஊக்கத்துடன் செயலாற்றுவேன். ஆத்துமாக்கள் அழிந்துபோகின்றன, நான் கவலையற்றவனாய் இருக்கமாட்டேன். இயேசு கிறிஸ்துவின் திருப்பெயர் மகிமையடையவேண்டும்“ என்று பதிலுரைப்பார்.
அச்சமின்றித் துணிவுடன் செயலாற்றிய அப்போஸ்தலனாகிய பவுல் உரைத்த சொற்களில் காணும் அவசரத்தைக் கவனியுங்கள்,“ஒன்று செய்கிறேன்… கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்“ (பிலி.3:13-14).
மேலும், நம்முடைய நற்பேறு மிகுந்த இரட்சகர் விரைவில் செயல்புரிவதையே தமது நோக்கமாகக் கொண்டிருந்தார். „ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்“ (லூக்.12:50).
ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை உணர்ந்தவர்களாக, பற்பல காரணங்களைக் கூறி ஓய்ந்திருக்கக்கூடாது.