பெப்ரவரி 14
இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் (அப்.4:29-30).
பெருந்தொல்லைகளுக்குட்பட்ட தொடக்ககலாக் கிறிஸ்தவர்கள் சூழ்நிலைகள் மாறவேண்டுமென்று காத்திருக்கவில்லை. மாறாக, அச்சூழ்நிலைகளில் தேவனை மகிமைப்படுத்தினர்.
அவ்வப்போது இம்மாதிரியைப் பின்பற்ற நாம் தவறிவிடுகிறோம். நாம் செயலாற்றுவதற்கு எற்ற சூழ்நிலை உருவாகுமட்டும் காலதாமதம் செய்கிறோம். தடைக்கற்களை இடையூறுகள் என்றே கருதுகிறோம். அவற்றை முன்னேற்றப்படிகள் என்று நினைப்பதில்லை. சூழ்நிலைகளைக் காரணம் காட்டி நாம் ஊழியப் பணிக்குச் செல்வதில்லை.
மாணவன் தனது படிப்பைத் தொடரும்வரை ஊழியத்தில் பங்கு கொள்வதில்லை. தொடர்ந்து வேலைதேடுதல், அலுவலகத்தில் வேலைப்பளு, திருமண ஏற்பாடுகள் ஆகியவை அவனை ஆட்கொள்கின்றன. பின்னர் குடும்பப் பொறுப்புகள், இன்னும் பல அலுவல்கள், ஆகையால், கிறிஸ்தவப் பணியில் ஈடுபடநேரமில்லை. ஆகா, ஓய்வுபெற்ற பின்னர் ஊழியம்செய்யலாம் என்ற எண்ணம் மேலிடுகிறது. ஆனால், ஒய்வு பெற்ற பிறகோ என்ன நடக்கிறது? உடலில் பெலன் குன்றிவிடுகிறது. அவனுடைய நோக்கமும் மாறிவிடுகிறது. இளைப்பாறுதல் அவனுடைய வாழ்வின் நோக்கமாகி அதற்கு அடிபணிகிறான்.
சில வேளைகளில் உள்ளுர் சபையை வழிநடத்துபவர்கள் எண்ணங்களுக்கு உட்பட்டு செயல்புரிய வேண்டியவர்களாக இருப்போம். உண்மையுள்ளவர்களாகவும், கடினமாக உழைக்கிறவர்களாகவும், அவர்கள் இருந்தாலும் மற்றவர்களுடைய ஊழியத்தைப் பாராட்டாது எதிர்த்து நிற்பார்கள். அச்சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம்? ஒதுங்கிக்கொள்கிறோம். அவர்களுடைய காலம் முடியட்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வியத்தகு வகையில் நீண்டகாலம் வாழ்கிறார்கள்! எனவே இவ்வாறு காத்திருப்பதில் பயனேதுமில்லை. யோசேப்பு சிறைவாசம் முடியட்டும் என்று காத்திருக்கவில்லை. சிறையிலேயே தேவனுடைய ஊழியத்தைச் செய்தான். பாபிலோனிய அடிமைத்தனத்திலும் தானியேல் தேவனுடைய வல்லவனாக உயர்ந்தான். பவுல் சிறையிலிருந்து நான்கு நிருபங்களை எழுதினார். சூழ்நிலை மாறவேண்டுமென்று அவர் காத்திருக்கவில்லை.
சூழ்நிலைகள் ஏற்றவையாக ஒருபோதும் இவ்வாழ்வில் காணப்படா. ஒரு கிறிஸ்தவனுக்கு சூழ்நிலை மேம்படும் என்ற வாக்குறுதி தரப்படவில்லை. இரட்சிப்பைப் போன்றே, ஊழியம் செய்வதற்கும் இதுவே அநுக்கிரகக் காலம்.
தன்னுடைய ஊழியத்தைச் செய்ய முழுவதும் சாதகமான காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க விரும்பும் ஒருவன், அதனைக் கண்டடைய மாட்டான் என்று லூத்தர் கூறியுள்ளார். “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்” என்று சாலோமோன் எச்சரிக்கிறதைக் கண்டுணர்க (பிர.11:4).