பெப்ரவரி 11
ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12).
மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே பேசுகிறது. ஆனால், மனிதன் இச்சொற்களை சரீரம், ஆத்துமா, ஆவி என்ற வரிசையிலேயே பயன்படுத்துகிறான். இறைவன் ஏற்படுத்திய ஒழுங்கை பாவம் தலைகீழாக மாற்றிவிட்டது. ஆகவே சரீரத்திற்கு முதலிடத்தையும், ஆத்துமாவிற்கு அடுத்த இடத்தையும் ஆவிக்குக் கடைசி இடத்தையும் மனிதன் தந்துள்ளான்.
மனிதனுடைய முக்கூறுகளில் ஆவி, ஆத்துமா ஆகிய இரண்டிற்கும் உருவம் இல்லை. ஆவி மனிதனை தேவனோடு ஐக்கியம் கொள்ளச் செய்கிறது. அவனுடைய ஆத்துமாவோ, அவனை மனக்கிளர்ச்சியோடும், உணர்ச்சியோடும் தொடர்புபடுத்துகிறது. ஆவியையும், ஆத்துமாவையும் மிகத் துல்லியமாக நம்மால் பிரித்துக் காட்ட இயலாதெனினும், ஆவிக்குரியது எது, ஆத்துமாவுக்கு உரியது எது என்று நாம் பிரித்தறிந்து கற்றிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆவிக்குரியது என்பது யாது? கிறிஸ்துவை உயர்த்திப் பேசுகின்ற பிரசங்கம். ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் ஏறெடுக்கிற மன்றாட்டு. கர்த்தரிடம் பாராட்டுகிற அன்பினால் ஏவப்பட்டதும், ஆவியினால் பலப்படுத்தப்பட்டதுமான ஊழியம். ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் ஆராதனை இவையாவும் ஆவிக்குரியவை. ஆத்துமாவுக்குரியது யாது? சொல்வளம் மிக்கதும், செய்தியை அழகுறத் தரும் திறமையும், நகைச்சுவைப் பேச்சும் மனிதனிடத்தில் மக்களை இழுக்கும், மற்றவர்களுடைய மனதில் பதியத்தக்கதாக ஏறெடுக்கப்படும் உயிரற்ற, இதய ஈடுபாடு அற்ற ஜெபம், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட ஊழியம், செல்வச் செழிப்பினை நாடிச் செல்லும் பணிகள், காணக்கூடிய வகையில் மாம்சீகத்தினால் செய்யப்படும் ஆராதனை இவையாவும் ஆத்துமாவிற்குரியன.
புனிதமாக்கப்பட்ட கட்டிடங்கள், சித்திரம் தீட்டிய பலகணிகள், ஆணவமிக்க பதவிகள், ஒளிதரும் தீபங்களும், தூபங்களும் கண்ணிகள் இவற்றைக் குறித்து தேவனுடைய சபை என்ன செய்யவேண்டும்? இன்னும் சற்று நெருங்கி வருவோம். ஊழியப்பணி வளர்ப்பு முயற்சிகள், செல்வத்தைச் சேர்க்கும் கூட்டங்கள், இசைப்பெரும் விழாக்கள் இவற்றைக் குறித்துச் சபை செய்யவேண்டியது என்ன?
ஒரு நடுத்தரக் கிறிஸ்தவப் பத்திரிகையில் வெளிவருகின்ற விளம்பரங்களே, நாம் எவ்வளவு ஆத்துமாவுக்கு உரியவர்களாக மாறிவிட்டோம் என்பதைத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஊழியங்களில் காணும் வேறுபாடுகளை பவுல் பகுத்துக் காட்டுவதைக் கண்டுணர்க. பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்றவை ஆவிக்குரிய ஊழியங்கள். அவை அக்கினியின் சோதனையில் நிலை நிற்கும். மரம், புல், வைக்கோல் போன்ற ஆத்துமாவிற்கேற்ற ஊழியங்கள் ஆகியவை அக்கினியில் எரிந்து சாம்பலாகிப் போய்விடும் (1.கொரி.3:12).