பெப்பரவரி 9
நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் (லூக்.9:49-50)
மேலோட்டமாக இதனைப் படிக்குங்கால், இதற்கு முந்தின நாள் சொல்லப்பட்ட வசனத்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட கருத்துடையதாகத் தோன்றுகிறது. உண்மையில் இரண்டு வசனங்களுக்கும் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அங்கே நமது இரட்சகர் தம்மிடத்தில் பற்றில்லாத பரிசேயர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான்“. இங்கே இயேசுவின் திருப்பெயரால் ஒரு மனிதன் பிசாசுகளைத் துரத்தியதைச் சீடர்கள் தடைசெய்தனர். அவன் அவர்களைச் சேராததினாலே அவனைத் தடைசெய்தனர். அவ்வேளையில் இயேசு கிறிஸ்து, „அவனைத் தடைசெய்யவேண்டாம். நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான்“ என்றார்.
இரட்சிப்பில் கிறிஸ்துவை விசுவாசியாதோர் அவருடைய எதிரிகளாகவும், ஊழியத்தில் அவரை எதிர்க்காதவர்கள், அவருடைய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். கர்த்தருக்காக ஊழியம் செய்கிறவனை நாம் எதிர்க்கலாகாது என்பதே இங்கு நாம் பெறும் அறிவுரை. மற்றவர்கள் ஆற்றும் பணியில் தலையிடாமல், நாம் ஊழியம் செய்வதற்கு இவ்வுலகம் பரந்து கிடக்கிறது. „அவர்களைத் தடைசெய்ய வேண்டாம்“ என்று இரட்சகர் உரைத்த சொற்களுக்கு நாம் இதயபூர்வமாக அடிபணிவோம்.
என்றாலும், சீடர்கள் யாவரும் பிசாசுகளை விரட்டிய மனிதனோடு சேர்ந்து கொள்ளும்படியான கட்டளையைக் கர்த்தரிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் ஊழியத்தில் பயன்படுத்துகிற முறைகள் நமக்கு எற்புடையதாயிரா. சிலர் நற்செய்தியில் சில உண்மைகளை மட்டும் வலியறுத்திக்கூறுவர். சிலருக்குக் கூடுதலான வெளிச்சம் கிடைத்திருக்கும். நாம் தவறு என்று கருதுபவைகளை அவர்கள் செய்ய விடுதலை பெற்றிருப்பர். நாம் இருக்கிற வண்ணமாக, அதே அச்சில் அனைவரும் ஊற்றி எடுக்கப்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. என்றாலும் நற்செய்தி வெற்றிபெறும் ஒவ்வொரு தருணத்திலும், பவுல் மகிழ்ச்சி அடைந்ததிற்கு ஒப்பாக நாமும் மகிழவேண்டும்.
„சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நன்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையும்கூட்ட நினைத்து, சுத்த மனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினால் அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். இன்னமும் சந்தோஷப்படுவேன் (பிலி.1:15-18).
இதனை வலியுறுத்தி சாம சூமார்க்கர் எழுப்பியுள்ள கேள்வியைப் பாருங்கள். „நம்முடைய வாழ்நாட் காலத்தில் இருளுக்கு எதிராக ஒளி நடத்தும் மாபெரும் போரில், நாம் விரும்புகிறபடி போர் செய்யாதவர்களாக இருப்பினும், நம் பக்கத்தில் இருந்து போரிடுகிற கூட்டாளிகளை ஆதரிப்பதன் அவசியத்தை எப்பொழுதுதான் கற்கப்போகிறோமோ? அந்திக் கிறிஸ்துவின் புயலுக்கு எதிராகக் கிறிஸ்தவ அணிகள் ஒருங்கிணைந்து போரிடுவதால் வெற்றி பெறுவோம் என்னும் உண்மையை எங்ஙனம் கற்போம்?