ஜனவரி 27
காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசி.5:16)
இப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நேரத்தை வீணாக்குவது பாவம்.
ஊக்கமான உழைப்பின் இன்றியமையாத தன்மைக்கு எல்லாக் காலத்தினரும் நற்சான்று வழங்கியுள்ளனர். நமது இரட்சகர், பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று கூறியிருக்கிறார்.
தாமஸ் கெம்பிஸ் என்பார், செயலற்றவராக இருக்கவேண்டாம். படியுங்கள் அல்லது எழுதுங்கள் அல்லது ஜெபியுங்கள் அல்லது தியானியுங்கள். இவ்வாறு பயனுள்ள வேலையில் ஈடுபடுவார்களாயின், உங்கள் உழைப்பு, பொதுவான நன்மைகளை விளைவிக்கும் என்று எழுதியுள்ளார். திருமறையை அருமையாக விளக்கித்தரும ஐp. கெம்ப்பேல் மொர்கன் அவர்களது வெற்றிக்குக் காரணம் என்னவென்று வினவியபோது, அன்னார் கொடுத்த பதில், வேலை, கடினமான வேலை, மீண்டும் வேலை என்பதேயாகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது ஒரு தச்சராகப் பணிபுரிந்தார் என்பதை நாம் ஒருக்காலும் மறந்துபோகக்கூடாது. அவருடைய புவி வாழ்வின் பெரும்பகுதி நாசரேத்துச் சிற்றூரில் ஒரு சிறிய கடையிலே கழிந்தது. பவுல் கூடாரத் தொழில் புரிந்தார். அப்பணியை தமது ஊழியத்தின் மிகச் சிறந்த பகுதியாகவே கருதினார்.
மனிதனுடைய வாழ்க்கையில் பாவம் பிரவேசித்ததினால் அவன் உழைக்கவேண்டியதாயிற்று என்று கருதுவது தவறு. பாவம் பிரவேசிப்பதற்கு முன்னரே ஆதாம் தோட்டவேலை செய்யும்படியாக ஏதேனில் வைக்கப்பட்டான் (ஆதி.2:15). சாபத்தின் விளைவாக வேலையோடு அயராது கடினமாக உழைக்கவேண்டிய நிர்ப்பந்தமும், வியர்வையும் சேர்ந்தன (ஆதி.3:19). பரலோகத்திலும் வேலை உண்டு, அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள் (வெளி 22:4).
வேலை செய்தல் நற்பேறாகும். நமது கற்பனைவளம் வெளிப்பட நாம் வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். நாம் கவனத்தோடு வேலைசெய்யும்போது நமது உள்ளமும் உடலும் சிறந்து விளங்குகின்றன. பயனுள்ள வேலையில் ஈடுபாடு உடையோராய் இருப்போமென்றால், பாவத்திலிருந்து காக்கப்படுவோம், செயலற்றுக்கிடக்கும் கைகள் செய்வதற்கு, சாத்தான் சில தீங்குகளைக் கண்டுபிடிக்கிறான். நம்மைச் சோதிக்கும்படி நமது செயலற்ற தன்னமை சாத்தானைச் சோதிக்கிறது என தாமஸ் வாட்சன் என்பார் கூறியுள்ளார். நேர்மையும், கவனமும், உண்மையும் கூடிய வேலை நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாத சான்றாகும். நாம் இறந்தபிறகும் நாம் செய்ய வேலையின் பயன் நிலைநிற்கும். ஒருவனுடைய சரீரம் கல்லறையில் உறங்கும்வேளையில் அவன் தொடர்ந்து பயனுள்ள வேலைசெய்கிறவனாகக் காணப்பட அவனுக்கே அவன் கடனாளியாயிருக்கிறான் என்று ஒருவர் கூறியுள்ளார். வில்லியம் ஜேம்ஸ் என்பார், நிலைநிற்கும் ஒன்றிற்காக நமது வாழ்வைச் செலவிடுவதே, அதனுடைய பெரும் பயனாகும் என்று சொல்லியிருக்கிறார்.