“நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங் 136:23)
தேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர். ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும் உள்ளங்களுக்குச் சொந்தக்காரர். உயர்த்தும் இதயங்களின் முகடுகளை மிதிக்கும் அவர், தாழ்த்தும் இருதயங்களில் மென்பாதங்களால் நடந்து வருபவர்.
தாழ்வில் இருந்த மனுக்குலத்துக்காக மீட்பின் ஐசுவரியத்துடன் நமது மீட்பர் கடந்து வந்தார். நரக வாசலில் இருந்த நம்மை மீட்டெடுத்தார். உரிமை கொண்டாடுகிறார். உறவினரானார்.
இன்று வசதி படைத்தோரை உறவு கொண்டாடும் உலகோர் உண்டு. வறியோரைக் குறித்து வெட்கப்படவும் செய்வர். ஆனால் தேவனோ மிகுந்த சொல்வந்தர். அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஆண்டவர். ஆனால் ஏழைகளையும் திக்கற்றோரையும் விசாரிக்கிறவர். நீதிமானின் குடிசைகளில் வாஞ்சையுடன் வாசம் பண்ணுபவர்.
தாழ்வின் நம்மை நினைத்தஆண்டவரை நமது இளைப்பாறுதலின் நாட்களில் மறப்பதிலும் கொடிய துரோகம் வேறில்லை. இஸ்ரவேல் வீணாய்த துரோகம் செய்து சிறதியது. நாமும் அவ்வாறு செய்வோமா? நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா? தேவனால் ஒருவர் நினைக்கப்பட்டபின் அவர் தாழ்ந்தவராக இருப்பாரோ?