முன்னுரைப்பு: சங்கீதம் 118:22
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
ஏசாயா 8:14
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
நிறைவேறுதல்: 1.பேதுரு 2:7
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.
ரோமர் 9:33
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன். அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
மேசியா உலகப் பிரகாரமாகத் தங்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரசனாகவோ அல்லது பலமிக்க தலைவனாகவோ வருவார் என்று யூதர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழைக் கன்னியின் வயிற்றில் பிறந்து, தச்சன் வீட்டில் வளர்ந்து, சாதாரண மீன் பிடிக்கிற எளியவர்களைத் தம் சீஷராகத் தேர்ந்தெடுக்கொண்டு, ஆயக்காரரோடும் பாவிகளோடும் உறவாடி, சமாதானக் கர்த்தாவாக கழுதையின் மேல் ஏறி பவனி வந்து, என்னுடைய இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்று கூறியது ஆசாரியருக்கும் பரிசேயருக்கும், வேதபாரகருக்கும் பொதுவாக சாதாரண யூதருக்கும் ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாயிருந்தது. ஆகையினால் அவரை மேசியா என்று ஏற்றுக்கொள்ளாமல் இகழ்ந்து, உதாசீனப்படுத்தி கடைசியில் சிலுவையிலறைந்து கொன்றார்கள்.
யூதர்க் அகாதென்று தள்ளிய இயேசுவே அவர்களுக்கு இடறுதலின் கல்லாகவும் விசுவாசிகளுக்கு உலக இரட்சகராகவும் பாவிகளை மீட்கும் பரிகாரியாகவும் இருந்து, தாவீது, ஏசாயாவின் முன்னறிவிப்புகளை நிறைவேற்றினார்.